சேலம் மாவட்டம் வலசையூரைச் சேர்ந்தவர் வக்கீல் அஜித்சாக்கோ என்பவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சில பெண்கள் கட்டண அடிப்படையில் ஆபாசமாக பேசி, வீடியோக்களைப் பதிவிட்டு 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினரைத் தவறான பாதையில் வழிநடத்துவதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சாதானா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்றைக்கு இன்ஸ்டாவில் ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி அதன் மூலம் சம்பாதிப்பது அதிகமாகி வருகிறது. சில பெண்கள் தங்கள் உடலை ஆபாசமாக காட்டி, அதனை பார்க்க பணம் கட்ட வேண்டும் என்று இன்ஸ்டாவில் காட்டுகிறார்கள். உடல் உறுப்புகளை முழுமையாக காட்டாவிட்டாலும், சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மிக ஆபாசமாக உடலை காட்டுவது நடக்கிறது. சிலர் இதன் மூலம் மாதம் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள். இந்த உள்ளடக்கங்களை சிறார்களுக்கும் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்படிப்பட்ட செயல்களை செய்வது சட்டப்படி கடுமையான குற்றம் ஆகும்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act, 2000) – பிரிவு 67ன் படி, இணையதளம், இன்ஸ்டாகிராம் அல்லது பிற மின்னணு சாதனங்கள் மூலம் ஆபாசமான/தூண்டும் விதத்திலான கருத்துக்கள் மற்றும் காட்சிகளை வெளியிடுதல் அல்லது பரப்புதல் குற்றமாகும். அதேபோல் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) / பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படி, பொதுவெளியில் ஆபாசமாக பேசுவது மற்றும் பொது அமைதிக்கு அல்லது இளைஞர்களுக்கு தீமை விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது தவறானதாகும். அதேபோல் பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் அல்லது ஆபாசத்தை தூண்டி வருமானம் ஈட்டுவது தொடர்பான பிரிவுகளிலும் வழக்கு போட முடியும். சிறார்கள் சப்ஷ்கிரிப்சன் செய்திருந்தால், அவர்கள் ஜாமீனில் வெளி வரவே முடியாது. அவர்கள் மீது போக்சோ வழக்கு பாயும்.
POCSO சட்டப்படி (பிரிவு 11 & 12) சிறுவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் அல்லது பொருள்களைக் காண்பிப்பது பாலியல் துன்புறுத்தல் குற்றமாகும். இதற்குக் கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும். அதேபோல் ஐடி சட்டம் – பிரிவு 67Bன் படி, மின்னணு சாதனங்கள் (இணையதளம்/ஆப்ஸ்) மூலம் சிறுவர்களுக்கு ஆபாசமான கருத்துக்கள், படங்கள் அல்லது வீடியோக்களைப் பரப்புவது, விற்பது அல்லது அவர்களை இதுபோன்ற கணக்குகளுக்குள் ஈர்ப்பது ஜாமீனில் வர முடியாத குற்றமாகும்.
எனவே கட்டணம் பெற்றுக்கொண்டு பாலியல் உள்ளடக்க சேவைகளை வழங்குபவர்கள், தங்களது வாடிக்கையாளர் 18 வயது நிரம்பியவரா என்பதைச் சரிபார்க்கத் தவறினால் அவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பாயும். “அவர் சிறுவர் என்று எனக்குத் தெரியாது” என்ற காரணத்தைக் கூறி தப்பிக்க முடியாது. இதுதான் சட்டம்ஆகும்.
இந்த சூழலில் சேலத்தை சேர்ந்த வக்கீல் அஜித் என்பவர், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.
குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறியிருந்தார்.
அதன்பேரில் சேலம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

















