நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவிக்கையில்,
அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ள நவராத்திரி காலத்தில் தமிழ் பாடசாலை மாணவர்கள் முழுமையாக அத் தினத்தை கொண்டாடுவதற்கு பாடசாலை அதிபர்கள், கல்வித் திணைக்கள பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
வருடந்தோறும் நடைபெறும் நவராத்தி விழா கல்விக்குரிய விழா. அது மட்டுமன்றி மாணவர்களின் கலை ஆளுமையை வெளிப்படுத்தும் காலமாகும் எந்தவொரு மாணவரும் தனது ஆளுமையை வெளிப்படுத்தவேண்டிய அரிய சந்தர்ப்பமான நாள். கடந்த சில ஆண்டுகளாக நவராத்திரிக் காலத்தில் பரீட்சைகளையும், வேறு விளையாட்டு போன்ற நிகழ்வுகளையும் திணைக்களங்கள் நடத்தியமையால் பல பாடசாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக நவராத்திரி விழாக்கள் வழமை போன்று சீராக இடம்பெறவில்லை.
நவராத்திரி விழாவானது சைவத் தமிழர்களுக்கு முக்கியமான விழாக் காலமாகும். குறிப்பாக இளைய தலைமுறையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றி தமது ஆளுமைகளை வெளிப்படுத்தும் காலமாகும். எனவே இக்காலத்தை பாடசாலைகளில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
எனவே இந்த விடயத்தை பாடசாலை அதிபர்கள், வலயப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் செயலர்கள் கவனத்தில் எடுத்து நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.


















