-கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை-
-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா பங்குக்குட்பட்ட மக்களில் யாராவது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆலய செயற்பாடுகளில் இருந்து தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக நேற்று கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியின் போது தெரிவித்துள்ளார்
எமது தமிழ் இனம் திட்டமிட்டு போதை பொருளால் அழிக்கப்படுகின்றது. தற்போது வட,கிழக்கில் போதைப்பொருள் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமராட்சி கிழக்கில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகிறது
வடமராட்சி கிழக்கு கடலில் அதிகளவான போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன
இதனால் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையாகும் எமது இனத்தை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
ஆகவே கட்டைக்காடு கப்பலேந்தி மாதா பங்குக்குட்பட்ட பொதுமக்கள் யாராவது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்
போதைப் பொருளை கடத்தி குடும்பங்களை சீரழிக்கும் இந்த கொடூரமான செயற்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


















