இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில், மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன்போது தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவிப் பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி, மந்திரிமனையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர்.

















