யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த யாழ். மத்திய கல்லூரி அணியை முரளி திசோன், ஐயாதுரை கபிஷேக், ஜேசுதாசன் நிதர்சன் ஆகியோர் பொறுப்புடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி மீட்டெடுத்து வெற்றி பெறவைத்தனர். இந்த வெற்றியுடன் வடக்கின் பெரும் சமரில் 30 ஆவது வெற்றியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பதிவுசெய்தது. வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டம் இழந்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்தன.
ஆனால், போட்டியின் மூன்றாவதும் கடைசி நாளில் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றியீட்டி பலத்த பாராட்டைப் பெற்றது.
இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் கல்லூரி 119 ஓட்டங்களையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 95 ஓட்டங்களையும் பெற்றன.
சென் ஜோன்ஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களைக் குவித்தது. இதனை அடுத்து 248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை வெள்ளிக்கிழமை ஆரம்பதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இருந்தது. இதன் காரணமாக இந்தப் போட்டியில் சென். ஜோன்ஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சகலதுறை வீரர் முரளி திசோன் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி தனது அணியை மீட்டெடுத்து வெற்றி பெறச் செய்தார்.
6 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
முரளி திசோன் 7 ஆவது விக்கெட்டில் ஐயாதுரை கபிஷேக்குடன் 37 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 8 ஆவது விக்கெட்டில் ஜேசுதாசன் நிதர்சனுடன் பெறுமதிக்க 97 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தார்.
முரளி திசோன் 126 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 81 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஐயாதுரை அபிஷேக் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ஜேசுதாசன் நிதர்சன் 33 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் முர்ஃபின் ரெண்டியோ 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர், சகலதுறை வீரர், ஆட்டநாயகன் என மூன்று விருதுகளை யாழ். மத்திய கல்லூரி வீரர் முரளி திசோன் தட்டிச்சென்றார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராக சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் உதயனன் அபிஜோய்ஷாந், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த விக்கெட்களாப்பாளர் விருதுகளை சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் கிருபாகரன் சஞ்சுதன் பெற்றார். வடக்கின் பெரும் போரில் இதுவரை நடந்த ஆட்டத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரி 40 வெற்றிகளையும் யாழ்.மத்திய கல்லூரி 30 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















