இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, ‘மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வைத்திய நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் நீல் ராபர்ட்சன், உலக பக்கவாத அமைப்பின் தலைவரும், நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் ஜெயராஜ் பாண்டியன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர, சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட நரம்பியல் ஆலோசகருமான பேராசிரியர் ரஞ்சனி கமகே உட்பட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல நரம்பியல் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக, வைத்தியத் துறையில் சிறந்து விளங்கிய நிபுணர்களுக்குப் பின்வரும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகரவுக்கு உயரிய பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இளம் நரம்பியல் நிபுணர்கள் மன்றத்தில் சிறந்த முறையில் ஆய்வுகளைச் சமர்ப்பித்த வைத்தியருக்கு விருது வழங்கப்பட்டது.
நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட சிறந்த ஆய்வாளர்களுக்கு ஆராய்ச்சி விருதுகள் வழங்கப்பட்டன.
சிறுவர்களுக்கான வலிப்பு நோய் அறுவை சிகிச்சை குறித்து ‘சாத்தியங்களின் கலை’ என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரைக்காக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஆலோசகர் சிறுவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டார்.
அதுமட்டுமன்றி இந் நிகழ்வில், இலங்கையின் நரம்பியல் துறை இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமான மூத்த நிபுணர்களின் சேவை இதன்போது விசேடமாக நினைவுகூரப்பட்டது.
இலங்கை நரம்பியல் துறையின் பிதாமகரான வைத்தியர் ஜே.பி. பீரிஸ் மற்றும் நாட்டின் முதல் பெண் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ரஞ்சனி கமகே ஆகியோரின் பங்களிப்புகள் மாநாட்டில் விசேடமாகப் போற்றப்பட்டன.
இவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளமே இன்று நவீன நரம்பியல் சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவடையக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் பக்கவாத சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்த உலக அளவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆற்றி வரும் சேவை பாராட்டப்பட்டது.
‘வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல. அது தைரியம், அன்பு மற்றும் நோயாளியின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது பற்றியது. இதுவே ஒருங்கிணைந்த நரம்பியல் துறையின் உண்மையான வெற்றி’ என இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நினைவு தப்பிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய் பிழைப்பது கடினம் எனக் கருதப்பட்ட நிலையிலும், வைத்தியக் குழுவின் தளராத முயற்சியால் 800 கிராம் எடையுடன் ஒரு குழந்தை பிறந்தது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் தனது தாயின் நினைவு நாளில் அந்த வைத்தியருக்கு இனிப்பு வழங்க வந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.
வைத்தியக் கல்வியில் இளம் நரம்பியல் நிபுணர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகள் நடத்தப்பட்டன.
இளம் வைத்தியர்களை வழிநடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், சிறந்த ஆய்வுக்காக வைத்தியர் ஷிராத் மதுரபெரும விருது பெற்றார்.
நரம்பியல் சிகிச்சை என்பது வைத்தியசாலை வார்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
வலிப்பு நோய், பக்கவாதம் மற்றும் மூளை ஆரோக்கியம் குறித்து நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்தியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து, நரம்பு மண்டலம் சார்ந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள சி.டி ஸ்கேன் வசதிகளை மேம்படுத்தவும் இலங்கை வைத்தியச் சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது.
இலங்கையில் முதல் முறையாக பெப்ரவரி 22ஆம் திகதி ‘உலக மூளைக்காய்ச்சல் தினமாக’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு காணொளிகள் மற்றும் மல்டிமீடியா துண்டுப் பிரசுரங்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டன.
நாட்டின் வைத்தியத் துறை எதிர்கொள்ளும் மிகமுக்கியமான சவால்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆளுமைகள் குறித்த முக்கிய தகவல்கள் முன்வைத்து, சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தனது உரையில் நாட்டின் தற்போதைய வைத்திய பற்றாக்குறை குறித்து கவலை வெளியிட்டார்.
ஏனைய வைத்திய துறைகளை விட நரம்பியல் துறையிலேயே மிக அதிகமான நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இளம் நரம்பியல் நிபுணர்களில் சுமார் 60 சதவீதமானோர் தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் அதிக பணிச்சுமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்துடன் மீண்டும் பலமான கல்விசார் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச நிபுணர்களின் அனுபவங்களை இலங்கையில் உள்ள இளம் வைத்தியர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தனது வைத்தியப் பயணத்தில் நரம்பியல் துறையைத் தேர்ந்தெடுத்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், மாணவர் பருவத்தில் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட அரிய வகை நரம்பியல் பாதிப்பை அவதானித்த தருணமே தனது வாழ்நாள் உந்துதலாக அமைந்தது என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
ஆராய்ச்சி, கொள்கை வகுத்தல் மற்றும் பல்நோக்கு கூட்டாண்மை மூலம் இலங்கையின் நரம்பியல் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுவதோடு, சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு வைத்தியக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான அழைப்பாகவும் இலங்கையின் நரம்பியல் துறையை உலகத் தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு மைல்கல்லாக அமையும்.
‘வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது மட்டுமல்ல; அது தைரியம், அன்பு மற்றும் மனித மாண்பு ஆகியவற்றால் ஆனது’ என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கும்.
இந்தத் தனித்துவமான நோயாளி அனுபவத்தின் ஊடாக, ‘ஒருங்கிணைந்த நரம்பியல்’ என்பதன் முக்கியத்துவத்தை மாநாடு வலியுறுத்துவதாக காணப்படும்.
பல்துறை நிபுணர்களின் கூட்டு ஒத்துழைப்பு, இளம் வைத்தியர்களுக்கான கல்வி மற்றும் வழிகாட்டல் இவை அனைத்தும் ஒன்றிணையும் போது, வைத்திய அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதும், நோயாளிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதும் இம்மாநாட்டின் பிரதான செய்தியாக காணப்படுகின்றது.
இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கம் கடந்த காலங்களில் அடைந்த கட்டமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இதன்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், மக்களின் விழிப்புணர்வு மற்றும் சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சி ஆகியவற்றில் சங்கம் காட்டி வரும் அக்கறை பாராட்டப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
















