-த.சுபேசன்-
கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாகாண மட்ட ஊராட்சி முற்ற நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாண குடிசார் அமைப்புக்களின் பிரதிநிகள் தமது மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்படாமல் காணப்படுகின்ற பிரச்சினைகளை முன்மொழித்திருந்தனர்.

குறிப்பாக, குடும்ப வன்முறைகளை எதிர்நோக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு, பொதுப்போக்குவரத்தின் போதான அசௌகரியங்கள், வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள், முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்கான தீர்வுத்திட்டத்திற்கான முன்னாயத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி ஊராட்சி முற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்கள் கனகராஜ், கிறிசலிஸ், நிறுவன வட பிராந்திய இணைப்பாளர் பிரபாகரன், ஏனைய திணைக்களத் தலைவர்கள், குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















