கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்கச் சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஐந்து பெண்கள் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக ஹட்டன் நகருக்கு வந்த ஏராளமான மக்களுக்கு கைக்குட்டைகளை விற்பனை செய்வதாக தெரிவித்து ஐந்து பெண்கள் நேற்று முன்தினம் ஹட்டன் நகரில் தங்கச் சங்கிலிகள் மற்றும் பணப்பைகளைத் திருடியபோது கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
குருநாகல், நாவலப்பிட்டி மற்றும் பவுவாகம பகுதிகளைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகத் தெரிவித்து தீபாவளிக்கு பொருட்கள் வாங்கச் சென்ற ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் பணப்பைகளையும் திருடியுள்ளனர்.
அதனையடுத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டு ஹட்டன் பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணையில் தங்கச் சங்கிலியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பணப்பை திருடிய மற்றைய பெண்களை பிணையில் விடுவித்து 21 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ஹட்டன் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


















