மத்திய வங்காள விரிகுடாவில் உருவான ‘மொந்தா’ என்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையினால் நகர்ந்து வருகிறது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படுவதோடு, இது எதிர்வரும் 27ம் திகதி புயலாக மாற்றம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
இது 2025-2026 வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் உருவாகவுள்ள முதலாவது புயலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ‘மொந்தா’ என்ற பெயரினை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது.
அதன்படி, மொந்தா புயல் எதிர்வரும் அக்டோபர் 27ஆம் திகதிக்கு முன்பாக புயலாக மாறி, வடமேற்கு மேற்கு திசையில் நகர்ந்து,
அக்டோபர் 28 ஆம் திகதி இரவு அல்லது 29 ஆம் திகதி காலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு இந்த புயலால் சேதமோ பாதிப்போ ஏற்படமாட்டாது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
கிழக்கு கரையோர பகுதிகளில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அருகிலான இடங்களில் கனமான மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் ஏற்படக் கூடும்.
மேலும், இன்று வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதன் முழுவதையும் இந்த புயல் உள்ளீரத்துக் கொள்ளும் என்பதனால் எதிர்வரும் 28.10.2025 – 06.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காது. ஆனாலும் பருவக் காற்று காரணமாக அவ்வப்போது சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.


















