குடிநீர் போத்தல்களில் SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புதிய உத்தரவு, 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிந்து அமுலுக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
திரவப் பானங்களை எடுத்துச் செல்வதில் மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் SLS 1616 விவரக்குறிப்புகளுக்கு இணங்க வேண்டும்.
குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட உணவளிக்கும் போத்தல்கள் SLS 1306 விவரக்குறிப்புகளுக்கு இணங்க வேண்டும்.
2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 12(1) இன் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட போத்தல்கள் SLS சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்பட்ட போத்தல்கள் இலங்கை தரநிலைகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மேலும், விதிமுறைகளுக்கு இணங்காத போத்தல்களை விற்பனை செய்தல், தயாரித்தல். பொதி செய்தல், கொண்டுசெல்வது, சேமித்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல் அல்லது காட்சிப்படுத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை, குடிப்பதற்கு ஏற்ற திரவங்களை எடுத்துச் செல்வதற்காகவும், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை ஒழுங்குபடுத்துவது குறித்த வர்த்தமானி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது.
மேலும், அவை இலங்கை தரநிலைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரையை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















