-செ.ரவிசாந்-
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் எல்லா வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், நோயாளர்களுக்குத் தேவையான குருதியை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடகச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சரியாக எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 226 பைந்த் குருதியே இருப்பில் இருக்கின்றது. தினமும் 35 – 40 பைந்த் குருதி எமது இரத்த வங்கியால் நோயாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. தற்போது விபத்துக்கள், சத்திர சிகிச்சைகள் அதிகரித்துச் செல்வதால் குருதியின் தேவை தினமும் அதிகரித்துச் செல்கின்றது. இரத்ததான முகாம்கள் மூலம் குருதி சேகரிக்கப்பட்டாலும் அதுவும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.
எனவே, குருதிக் கொடையாளர்கள் தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பின்பக்க நுழைவாயிலின் ஊடாகத் தந்து குருதிக் கொடை செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு 0772105375, 0212226643 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


















