மாகாணசபைத் தேர்தலைகளை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த வருட இறுதிக்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது.
தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெறும் என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாகாணசபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்து செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.
எனவே, மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது பற்றி முதலில் தீர்மானத்துக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக அனைத்துக் கட்சிகளின் இணக்கத்துடன் சிறந்த முறைமையை அறிமுகப்படுத்திய பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதற்காக மக்களுக்கு உள்ள உரிமையை அரசாங்கம் தடுக்காது. எனினும், தேர்தல் திகதி பற்றி தற்போது உறுதியாகக் கூறமுடியாது என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.


















