9 மாகாண சபைகளையும் தங்களால் கைப்பற்ற முடியும் என தேசிய மக்கள் சக்தி கட்சி கூறிக் கொண்டிருந்தாலும் வடக்கு மாகாண சபையை ஒருபோதும் அவர்களால் கைப்பற்ற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தென்னிலங்கையில் நடைபெற்ற பல கூட்டுறவு சங்க தேர்தல்களில் கூட தேசிய மக்கள் சக்தி கட்சி தோல்வியடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இதுவரை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் தமிழர்கள் தமது விருப்பை தாமே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறித்த விடயங்களை முன்நிறுத்தி அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளதாகவும் இதில் உலகத் தமிழர்கள் ஒண்றிணைந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


















