– வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் ஆலம் –
இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்துவதை விட தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதே அதிகமாக காணப்படுகிறது. இலங்கை கடல்ப்பரப்பில் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் தமிழக மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையாது இருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை கடல்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான கைதுகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பில் நுழையாதீர்கள் என எத்தனையோ தடவைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும்,தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றது. தமிழக மீனவர்கள் தமிழகத்தில் தொழில் செய்வதை விட இலங்கை கடற்பரப்பில் தான் தொழில் செய்கின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
தொடர் கைதால் தமிழக மீனவர்கள் படுகின்ற துன்பங்களையும், வேதனைகளையும் நாங்கள் பார்த்து வந்தாலும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏன் நிறுத்துகிறார்கள் இல்லை என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
கடற்பரப்பு ஊடாக ஆள்கடத்தல்கள் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கடல் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளதாக அரசு கூறிக் கொண்டாலும், தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைகளை பார்க்கின்ற போது போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஆள்கடத்தல்கள் இடம் பெறுகின்றமை குறித்த கைதுகள் மூலம் தெரிய வருகிறது.
இந்திய மீனவர்கள் பல படகுகளுடன் கைது செய்யப்படும் சூழ்நிலையில், கடத்தல்காரர்கள் குறித்த கடல் பகுதியை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. கடற்படையின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்பதே உண்மை என அவர் மேலும் தெரிவித்தார்.


















