கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவி, காலை தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததை அவதானித்த பெற்றோர், மயக்க நிலையில் இருந்த மாணவியை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பாக கண்டறிவதற்கு மாணவியின் வீட்டுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


















