குடும்ப சுகாதார சேவைகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்படவுள்ள ஒரு சிறப்பு தொழில்நுட்பக் குழு பிரச்சினைகளை ஆய்வு செய்து, வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்கச் செயல்படும் என சுகாதாரப் பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார சேவையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், அகில இலங்கை குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது சுகாதார பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அகில இலங்கை குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சவாலாக இருக்கும் மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பல பிரச்சினைகள், அவற்றைப் பாதிக்கும் பிற தொழில்முறை பிரச்சினைகள், குடும்ப சுகாதார சேவைத் துறையில் சிறந்த தரத்தைப் பேணுவதற்கான சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து துணை அமைச்சருக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
இந்நிலையில்,உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை வழங்க பிரதி அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
மேலும் பல பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
மேலும் மாகாண சபை மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு உள்ளார்ந்த பல பிரச்சினைகள் இருப்பதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டத்தையடுத்து, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மாகாண ஆளுநர்கள் மற்றும் துணை அதிகாரிகளுடன் விரைவில் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் , அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அகில இலங்கை குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


















