-பா.சதீஸ்-
மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் தொடர்பான அறிமுக நிகழ்வு எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலே இத்திட்ட அறிமுகம் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் 8 கிராம சேவையாளர் பிரிவுகளில் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

செயற்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மஞ்சுளாதேவி, எமது மாவட்டம் போரின் பாதிப்புகளை கடந்து தற்போது மீளெழுச்சி பெற்று வருகின்றது. சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. இக்காலகட்டத்தில் சமூக மற்றும் மத நல்லுறவை வலுப்படுத்துவது அவசியம். அதற்காக பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். இதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே உத்தியோகத்தர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சிராஜ், எழுத்தாணி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் வ.ராஜ்குமார், திட்ட ஆலோசகர் வே.காண்டீபன், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களின் நிர்வாக உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் எழுத்தாணி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


















