மேலும் பல உயிர்களை பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அத்தனகலைப் பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியம்.
இது போன்ற இணையவழி கடன் வழங்கும் பல சட்டவிரோத நிறுவனங்கள் காணப்படுவதனால், இது தொடர்பாக ஒரு முறையானதொரு சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும்.இந்த விவகாரத்தை ஆராய்ந்து பாரத்து, மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இதனை இல்லாதொழிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றார்.


















