-பா.சதீஸ்-
முல்லைத்தீவு, கொக்கிளாய், மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
இதன்போது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மக்களை வெள்ள அனர்த்தத்தின் போது மீனவர்கள் படகுகள் மூலம் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நிலவரத்தின்படி குறித்த பகுதி மக்களின் தேவைகருதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கமைப்பில் இலங்கை கடற்படையின் உதவியுடன் படகு மூலம் குறித்த பகுதிக்கான போக்குவரத்து இலவசமாக நடைபெற்றுவருகின்றது.
இந்த நிலமைகள் தொடர்பிலும், உடைந்துள்ள பாலத்தில் நிலைமைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார்.
குறித்த பாலத்தின் நீரோட்டம் குறைந்ததும் தற்காலிகமாக குறித்த பாலத்தினால் போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.


















