-பா.சதீஸ்-
முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
மேற்படி கிராமத்தில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் பிற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன் நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
















