-வைத்தியர் சந்திரகுமார்-
வவுனியாவில் இதுவரை 43 பேர் எச்ஐவி நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் இத்தொற்றால் இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
உலக எயிட்ஸ் தினம் மார்கழி முதலாம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொனிப் பொருளில் அனுஸ்டிக்கபடுகிறது.
இலங்கையில் இதுவரை 7168 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அதில், ஆண்கள் 5544 பேரும் பெண்கள் 1603 பேரும் இடைநிலை பால் நிலையை சேர்ந்த 21 பேரும் இதனுள் அடங்குவர். இதுவரை நாட்டில் 1629 பேர் இந்நோயால் இறந்துள்ளனர்.
இதேவேளை,எந்தவித தொற்று அறிகுறிகளுமின்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.
வவுனியா மாவட்டத்தில் இதுவரை 43 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 21 பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் ஆவர். 2 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13 பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.
நாட்டில் 15 வயது தொடக்கம் 25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர்.
அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டு பிடிக்க முடியும். எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.
















