வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கின.
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
இந் நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கரையொதுங்கின.
அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசிய நிலையில் குறித்த விடயம் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு, நகர சபை பணியாளர்களின் உதவியுடன் கரையொதுங்கிய மாடுகள் மீட்கப்பட்டு, கடற்கரை பகுதியில் பாரிய பள்ளம் தோண்டப்பட்டு உயிரிழந்த மாடுகள் புதைக்கப்பட்டன.















