அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் நேரடியாகப் பொறுப்புக்கூறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதியுதவிகளைப் பொறுப்பேற்கும் ஏனைய சங்கங்களினதோ அல்லது தனிநபர்களினதோ கணக்கு இலக்கங்களுக்கு தமது அமைச்சு இணக்கப்பாட்டையோ அல்லது அனுமதியையோ வழங்கவில்லை எனவும் அந்த நிதியுதவிகளுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட சங்கங்கள் அல்லது தனிநபர்களே ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இக்கட்டான நேரத்தில் மக்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டுவதாகவும், மாணவர்களுக்காக வழங்கப்படும் நிதியுதவிகளின் போது அதன் பொறுப்புத்தன்மை குறித்து கவனமாக இருக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக தற்போது மக்கள் பலரும் மற்றும் அமைப்புகளும் பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
அவ்வாறு பங்களிப்பை வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதியுதவிகளைப் பொறுப்பேற்பதற்காக அரசாங்கத்தினால் சில கணக்கு இலக்கங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்க கணக்கு விபரங்களை www.donate.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.


















