இன்று அதிகாலை 1 மணியளவில் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த வேனின் சாரதியும் பெண் ஒருவரும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய காட்டு யானை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கவுடுல்ல தேசிய பூங்காவிலிருந்து ஹுருலு சூழலியல் பூங்கா நோக்கி பிரதான வீதியைக் குறுக்கறுத்துச் செல்ல முயன்ற போதே, இந்த யானை வேனுடன் மோதியுள்ளதாக கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 12 வயதுடையது எனவும், அது 5 அடி உயரமான விலங்கு எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹத்தரஸ்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















