ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீகியனகே தெரிவிக்கையில், பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார்.
குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என்றபோதிலும், அதற்கு முன்னர் அதனை நடைமுறைப்படுத்த முற்படுவதானது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆதரவு வழங்குவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.


















