-ஹர்ஷன ராஜகருணா எம்.பி கண்டுபிடிப்பு-
இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனக் கூறிய அரசாங்கமே இனவாதக் கருத்துக்களை நாட்டில் பரப்பி வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, இனவாதத்தை தூண்டவேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வடக்குக்கு சென்று தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. அதனால் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டாமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றாக எழுந்திருக்க வேண்டும். தெற்கில் ஒருவிதமாகவும் வடக்குக்கு சென்று அதனை வேறு விதமாகவும் சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுவதை தற்போதாவது நிறுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.
வடக்குக்கு சென்று பாரியளவில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதனை தெற்கில் விமர்சிக்கின்றனர்.
அதேநேரம் தமிழ், சிங்களம் முஸ்லிம் என பார்க்காமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இனவாதத்தை தூண்டுவதில்லை என அரசாங்கம் தெரிவித்துவருகின்றபோதும். ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாதத்தை தூண்டிவருகிறது. அதனால் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் எமது நாட்டு பௌத்தர்கள் நாட்டில் இருக்கும் எந்த விகாரைக்கு வழிபடச் சென்றாலும் அவர்கள் வைராக்கியத்துடன் செல்வதில்லை. ஜனாதிபதியே வைராக்கியத்துடன் செல்கிறார். வைராக்கியத்தை பரப்புவதும் ஜனாதிபதியும் அவரது சீடர்களுமாகும்.
நாங்கள் நாகதீபம், சிறிமாபோதி, களனி விகாரைக்கு செல்வது வழிபடுவதற்காகும். மாறாக வைராக்கியத்துடன் யாரும் செல்வதில்லை. வைராக்கியத்தை பரப்ப வேண்டும் என்றால் நாகதீபத்துக்கு செல்லத் தேவையில்லை. கொழும்பில் இருந்து பரப்ப முடியும்.
ஜனாதிபதி, ஆட்சிக்கு வரும் முன்னர் தெரிவித்த எதனையும் தற்போது செயற்படுத்துவதில்லை. தலதாமாளிகைக்கு செல்லும்போது ஊடகங்களை அழைத்துச்செல்வதில்லை என்றே தெரிவித்திருந்தார். ஊடகங்கள் இல்லாமலே நாங்கள் தலதா வழிபடுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அவ்வாறா இடம்பெறுகிறது? ஊடகங்களை அழைத்துக்கொண்டே மத வழிபாடுகளுக்கு செல்கிறார். ஹெலிகொப்டரில் செல்வதில்லை என தெரிவித்தார்கள். ஹெலிகொப்டர் இரண்டு எடுத்துச் செல்வது, பாய்வதற்காக என அன்று கேட்டார்கள்.
ஆனால் இன்று ஹெலிகொப்டர் இரண்டு எடுத்துச்செல்கிறார்கள். அதனால் இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் தெரிவித்த எதனையும் செயற்படுத்துவதாக இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.


















