புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக பேசப்படுவது ஆரோக்கியமானது ஆனால், கடந்த காலங்களில் அரசியலமைப்பை மறுசீரமைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை கண்டறியாமல் முன்நோக்கி நகர்வது சாத்தியமற்றது என உதய கம்மன்பில கூறினார்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் வன் டெக்ஸ்ட் இனிஸியேட் டிவ் எனும் அமைப்பினால் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும். அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அதுசார்ந்த பிரிவினையும் எமது நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது. அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும் பிரதிபலித்தன. ஏன் மூன்று தசாப்தகால யுத்தம் ஆரம்பமானது, ஏன் தமிழர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளானார்கள் என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் சிங்களவர்கள் ஏன் சமஷ;டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லை. இவ்விடயத்தில் சிங்களவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் முன்னோக்கி நகர இயலாது.
அதேபோன்று நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையைப் பொறுத்தமட்டில், நான் அம்முறைமையை ஆதரிக்கும் சிறுபான்மைத்தரப்புக்குள் இருக்கிறேன். ஏற்கனவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கப்ப ட்டிருக்கும் பின்னணியில், மீண்டும் ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக்கொள்ளாத புதியதொரு ஆவணத்தை உருவாக்குவதில் எவ்வித பயனுமில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.


















