-இரு சந்தேகநபர்கள் கைது-
புத்தர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாசம் பூசப்பட்ட கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களையே இவ்விரு சந்தேகநபர்களும் திருடினர்.
அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற இவர்கள், நாவலப்பிட்டி – கெட்டபுலாவ விகாரையில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடினர். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகளிலேயே நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட பிலிமதலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் புத்தர் சிலைகளின் தலைப் பகுதிக்குச் சேதம் விளைவித்துத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் பெருமளவிலான தங்கத்தையும், உருக்கப்பட்ட தங்கக் கட்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறிப்பாகக் குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் உள்ள தனியார் நகை விற்பனை நிலையங்களில் இவர்கள் திருடிய தங்கத்தை விற்பனை செய்துள்ளமையும், அங்கு அவை உருக்கப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.
அத்துடன், இக்குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


















