-இ.கலைஅமுதன்-
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4ம் மாடியில் சித்திரவதை முகாம் உள்ளது. அங்கு செல்லும் சந்தேகநபர்கள் மோசமாக பார்க்கப்படுகிறார்கள். அமர்வதற்கு கதிரைகூட இல்லை என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, இவ்வாறான நிலையில் அரசாங்கம் புதிதாக மனித குலத்திற்கே எதிரான விடயங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபை உருவாக்கியுள்ளதாகவும், அந்த சட்டவரைபை உடனடியாக நீக்கவேண்டும் எனவும் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் அப்போதைய சூழலுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் பொருத்தமானதாக அமைந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் பல சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்தார்கள். கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடி சித்திரவதை முகாமாகவே காணப்படுகிறது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 4 ஆம் மாடிக்கு சென்றால் சந்தேகநபர்கள் மிக மோசமாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அமர்வதற்கு கதிரை கூட கிடைப்பதில்லை. இன்றும் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் மனித குலத்துக்கு எதிரான வகையில் அரசாங்கம் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபை தயாரித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து மனிதநேயமிக்க சட்டத்தை உருவாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

















