-யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன்-
-த.அம்பிகாவதி-
யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் உள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான தேவைகளை ஈடுசெய்வதுடன் வசதிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு காணப்படுகிறது என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார்.
மாற்றாற்றல் உள்ளவர்களுக்கான மாவட்ட மட்ட வழிகாட்டல் குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றவேளை அதில் தலைமையுரையாற்றியபோதே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச மட்டத்தில் இது தொடர்பாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வழிகாட்டல் கூட்டங்களில் இனங்காணப்படும் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மாவட்ட மட்டத்தில் துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்து அதற்கான தீர்வுகள் வழங்கப்படுவதற்காக இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்படுகிறது.
மாற்றுத்திறன் உள்ளவர்களின் வாக்குரிமை தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், இது தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் போது அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் காணப்படுகிறது.
மாற்றுத்திறன் உடையவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமாக காணப்படுகிறது. அதன் வகிபாகம் சரியாக மேற்கொள்ளப்படும் போது செயற்பாடுகள் சிறப்பாக அமையும். எனவே, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் முன்நின்று செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















