-இனக் கலவரத்துக்கும் வழிகோலியது என்கிறார் லலீசன்-
-செ.ரவிசாந்-
1956 ஆம் ஆண்டில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் அரசியல் சார்ந்து தமிழ்மொழிக்குப் பலத்த சவாலை வழங்கியது .இது நாட்டில் இனக் கலவரம் இடம்பெறுவதற்கு வழிகோலியது. இதனால், தமிழர்களிடையே தனிநாடு பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இது பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்று மொழியுரிமைக்காகவும், வாழ்வுரிமைக்காகவும் போராடும் சூழலை ஏற்படுத்தியது எனக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கொடைக்கானல் அன்னை தெரேசா மகளிர்; பல்கலைக்கழகத்தில் உலகமும் தமிழரும் தமிழும் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றபோது இணையவழியில் கலந்து கொண்டு ‘இலங்கையில் தமிழர்கள் தமிழ் வளர்ப்பதில் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும்’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அன்று முதல் அரசியல் ரீதியாகத் தமிழ்மொழியை நிலைநிறுத்துவதில் சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாண நூலக எரிப்புத் தமிழ்மொழிக்கான மற்றும் தமிழர்களுக்கான பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழியல் சார்ந்த பெறுமதியான ஏடுகள் சாம்பலாயின. இந்த நூலகம் 2004 ஆம் ஆண்டில் மீண்டும் அதே இடத்தில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டது. ஆயினும், இழந்து போன பெறுமதியான ஏட்டுச் சுவடிகளை மீளப் பிரதியீடு செய்ய முடியவில்லை.
1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக் கலவரங்களும் இதற்குப் பிரதான காரணமாகும். இதனால் ஆவணமாக்கப்பட்ட பல சொத்துக்கள் யுத்தத்துள் தொலைந்து போயின. வடக்கு, கிழக்குத் தாயகத்தைச் சேர்ந்த தமிழர்களில் பலர் அரசியல் அகதிகளாகத் தமிழகத்திலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
இலங்கையில் பாடநூல்கள் பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவரால் சிங்கள மொழியில் எழுதப்படுகின்றன. பின்னர் அவை தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழி பெயர்ப்பின் போது பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் பாடத்துறை சார்ந்த கலைச்சொற்கள் மிக நீண்டகாலமாக இற்றைப்படுத்தப்படாத நிலை காணப்படுவதால் கல்வித்துறை சார்ந்தோர் சொற்களஞ்சியம் குறித்தான சவால்களை எதிர்கொள்கின்றனர்.இதனால், பாடசாலைகளில் போதிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தில் சிங்கள மொழி சார்ந்த வரலாற்றுச் செய்திகளுக்கு முதன்மை வழங்கப்படுவதான குற்றச்சாட்டுகளும் உள்ளன என அகர் மேலும் குறிப்பிட்டார்.


















