-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்-
-த.அம்பிகாவதி-
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில் அப்பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் புனிதமானவையாகும். அந்த இடத்தின் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டே நாம் அங்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மடத்தைப் பிரதேச சபையிடம் கையளிப்பது மிகவும் பொருத்தமானதொரு முடிவாகும். குறித்த ஆதனம் பிரதேச சபைக்கு உரித்தானதாக இருந்தால் மாத்திரமே அங்கு முறையான அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியும். இந்த மடத்தை ஒரு முறையான நிர்வாக ஒழுங்குக்குள் கொண்டு வருவதன் ஊடாக, இங்கு வரும் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.
அத்துடன் இந்தப் பிரதேசம் சுற்றுலா சார்ந்த பாரிய ஈர்ப்பையும் கொண்ட ஒரு பிரதேசமாகும். எனவே, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் அதேவேளையில் புனிதத்தன்மையையும் நாம் எவ்வித குறையுமின்றிப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
இங்கு தமது உறவுகளின் அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கூட எம்மவர்கள் வருவதுண்டு. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை எதிர்காலத்திலும் சிறப்பாகப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பிரதேச சபைக்கு இதனைக் கையளித்த அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


















