அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சுவரை தூய்மை, எளிமை, நேர்மை, பொதுவுடைமையைக் கடைப்பிடித்து வந்த இரா. நல்லகண்ணு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளார்.
அவரின் தன்னலமற்ற தியாக வாழ்வை நன்றியுடன் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இந்நினைவுகூர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூக ஆய்வாளர் தெ. மதுசுதனன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினார்கள்.


















