-‘கேபிள்’ தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
இரு நிறுவனங்களின் சுயநலன்களால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ‘கேபிள்’ தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் தமக்கான நீதியை தாமதமின்றி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் அகில இலங்கை கேபிள் ரிவி ஒப்பரேற்றர்கள் சங்க பிரதிநிதிகள் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் ‘கேபிள்’ தொலைக்காட்சி சேவையை கேபிள் ரிவி லிங் ஒப்பரேற்றர்கள் என்ற நிலையில் இருந்து நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 லிங் ஒப்பரேற்றர்களும் மலையகத்தில் 54 லிங் ஒப்பரேற்றர்களும் உள்ளடங்கலாக 300 க்கும் அதிகமானவர்கள் இந்த சேவையினை முன்னெடுக்கின்றனர்.
இலங்கையில் இரு நிறுவனங்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அதற்கான உரிமங்கள் வழங்கப்படவில்லை.
நாம் தேசிய தொலைதொடர்பு ஆணைக்குழுவிடம் எமது விண்ணப்பங்களை கொடுத்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
குறிப்பாக 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை அனுமதிக்காக பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதிக்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தும் குறித்த இரு நிறுவனங்களின் அழுத்தங்களால் தடுக்கப்பட்டுள்ளது.
நாம் இந்த சேவையை முன்னெடுக்க பல கோடிகளை முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது தொழிலும் இல்லை முதலும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள எமது சேவையை மீட்டு எமக்கான நீதியை பெற்றுத்தர உரிய தப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


















