-உண்மையை போட்டுடைத்தார் ஈரானியத் தூதுவர்-
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இங்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை. இந்தியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது இலங்கை கடற்படைத் தளபதி இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வந்த கப்பலை, அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 104 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் இராணுவ சார்பற்ற ஓர் இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள், அந்த அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுபவை அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மேலும், அவை அமெரிக்கத் தாக்குதல்களுக்கு நேரடிப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாம் நமது அண்டை நாடுகளுக்கு அனுப்பும் செய்தியே முக்கியமானது, தயவுசெய்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்களுக்கு உடந்தையாகிவிடாதீர்கள் என்றார்.


















