நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஹாவாஎலிய பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், மக்களுக்குத் தேவையான அபிரித்திப் பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
முந்தைய ஆட்சிக் காலங்களைப் போலன்றி, நாங்கள் அடிக்கல்களை மட்டும் நாட்டுவதில்லை. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பணிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடையும். அதன் திறப்பு விழாவிற்குக்கூட நாங்கள் வரமாட்டோம். இதுவே எமது புதிய அரசியல் கலாசாரம். என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து எதிர்க்கட்சிகள் சர்வதேச மோதல்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகின்றன. மீண்டும் நாடு அவர்கள் கைக்குச் சென்றால் ஏற்படக்கூடிய விபரீதங்களை மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.


















