மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால், சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில், மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் வியாழக்கிழமை இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்தான்.
அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும், இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மாணவனின் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கேட்ட நிலையில், மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு பொறுப்பாயிடும் செய்ய மாட்டோம் என தெரிவித்தனர்.
மாணவனை அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வண்டி ஏதாவது ஒழுங்கு செய்து தாருங்கள் எனக் கேட்ட நிலையில், அதுவும் தம்மிடம் இல்லை வேறு ஆம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராது என தெரிவித்தனர்
இதனையடுத்து மயக்கமடைந்த மாணவன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















