-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமானங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பாக இராணுவத்தால் வைத்தியசாலை அமைப்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்த தீர்மானத்தை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் வழிமொழிந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


















