மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் மன்னார் நகரை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று அதிகாலை வரை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவுப் பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது . இதனால் மன்னார் நகரப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள், ஆண்கள் எனப் பலர் காயமடைந்திருக்கின்றனர்.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றது.

இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து, மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி மக்களின் எதிர்பை மீறியும், மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக அமைதியான முறையில் காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும், மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது .

அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் கொடூரமாக பெண்கள், அருட்தந்தையர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
அதே நேரம் போராட்டக்காரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயுத முனையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி, தாக்கி காற்றாலை உதிரிப்பாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும், தடிகலால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

















