அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை மீட்கப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தந்தை, அவரது உறவுக்காரப் பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை.
எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவ் உறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப்படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியுள்ளது.


















