உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், குரல்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் மண்டரினா ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உரையாற்றுகையில்,
இந்நிகழ்வுக்கு ‘பெண்களின் குரல்களை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தாலும், அதே சமயம் மனக்கசப்பையும் தருகிறது. ஏனெனில் இன்று நாம் வாழும் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன.
அத்தோடு, சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களில் தற்போது ‘பாரம்பரியமான மனைவி’ எனப்படும் புதிய போக்கு பரவலாகியுள்ளது.
இளம் பெண்கள் வேறு பெண்களை தொழில், பொருளாதார சுயாதீனம், பொது வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு வீட்டு வேலைகளை முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறார்கள்.
இதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2023 அறிக்கையுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் 74.8 கோடி பேர் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக வேலைவாய்ப்பில் ஈடுப்படவில்லை. அதில் 70.8 கோடி பெண்களும், வெறுமனே 4 கோடி ஆண்களும் அடங்குகின்றனர்.
பெண்கள் குழந்தை பராமரிப்பு, விசேடதேவையுடையவர்கள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணி போன்றவற்றில் அசாதாரண அளவில் சுமையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதனால் தான் இன்றைய தலைப்பு மனக்கசப்பைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டது ஆனால் இன்னும் பெண்களின் குரலை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு ‘Women Shot AI’ எனப்படும் யூடியூப் சேனல் ஒன்று உருவானது. அதில் பெண்கள் தலையில் சுடப்படுவதை காட்டும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அதை 4O4 Media வெளிப்படுத்திய பின்னர் அதனை யூடியூப் நீக்கியது. ஆனால் அதற்குள் 2 இலட்சம் பார்வையாளர்கள் அதை பார்த்துவிட்டனர்.
இந்தக் காலத்தில் கூட, இப்படிப்பட்ட வன்முறைச் சித்திரங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே கவலைக்குரியது.
இதற்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? உள்ளடக்கக் கட்டுப்பாடு அவசியம் தான். ஆனால் அது போதுமானதல்ல. பெண்களின் சமத்துவத்தைத் தடுக்கின்ற வரலாற்று, அமைப்பு, கட்டமைப்பு தடைகள் தற்போது புதிய வடிவங்களில் – குறிப்பாக சைபர் வன்முறை போன்றவற்றில் – வெளிப்படுத்தப்படுகின்றன.
ஒரே நபரின் அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் (பாலினம், மதம், இனப்பெருக்கம், வர்க்கம் போன்றவை) இணைந்து சமத்துவமின்மையை ஆழப்படுத்துகின்றன. பெண்கள் பல அடுக்குகளில் ஒதுக்கப்படுவதையும் எதிர்கொள்கிறார்கள்.
சட்டமும், நீதிமன்றங்களும் கூட நடுநிலையாக இல்லை. அவையும் ஆணாதிக்கம், வர்க்கம், மதம் போன்ற பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூட பெண்கள் ஊழியர்களுக்கு எதிரான, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இது வேறு காரணங்களைத் தீர்க்காவிட்டால் நீதியை வழங்க வேண்டிய அமைப்புகளும் வலுப்படுத்தும் என்பதை காட்டுகிறது.
பெண்களின் கோபம் கூட ‘அவசியமற்றது’ அல்லது ‘அதிகப்படுத்தல்’ என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கோபமே அநீதிக்கு எதிரான இயல்பான, நியாயமான பதிலாகும் என்றார்.


















