பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு பாதிச் சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளை பணி இடை நீக்கம் செய்ய நீதிச் சேவை ஆணைக்குழு சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, அந்த நீதிபதிகளுக்கு பாதிச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பாதிச் சம்பளம் வழங்குவதில் தொழில்முறை கொடுப்பனவுகள், தனிப்பட்ட கொடுப்பனவுகள், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் மற்றும் மொழிக் கொடுப்பனவுகள் மட்டுமே வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தொலைபேசி கொடுப்பனவுகள், வாகனக் கொடுப்பனவுகள், சாரதிக் கொடுப்பனவுகள், புத்தகக் கொடுப்பனவுகள், வீட்டு வாடகைக் கொடுப்பனவுகள், மேன்முறையீட்டுக் கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் என்பனவற்றை சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு வழங்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

















