அரசாங்கத்தால் யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் – நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், குறித்த பகுதியில் கடற்படைக்கு றேடர் அமைக்கும் நோக்குடன் 2 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வலிகாமம் வடக்கு பகுதியில் அண்ணளவாக 300 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது.
இவ்வாறிருக்கையில், இந்தப் பகுதிகளுக்கு மேலதிகமாகவே தற்போதைய சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான பகிரங்க அறிவித்தல் தெல்லிப்பழை பிரதேச செயலரால் விடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் காணிகளை விடுவிப்பதாக அநுர அரசு மீண்டும் மீண்டும் கூறுகின்ற போதிலும், வாக்குறுதிக்கு அமைய எந்தவொரு விடுவிப்பு நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறவில்லை.
அத்துடன், விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணிகள் பலவற்றில் இருந்து இன்னமும் கடற்படை வெளியேறாத நிலையும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது கடற்படைக்கு றேடர் அமைக்கும் நோக்குடன் மேலும் 2 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


















