-யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு-
-காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு ஆரம்பிக்கப்படும்-
சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன. யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காக கொண்டு
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பன விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக யாழில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க உறுதியளித்துள்ளார்.
மேலும் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் அமரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத் திட்டம் 2026′ அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் எனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும்.
வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருக்கிறது. அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது. உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.


















