படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மாவட்ட செயலகம் முன்பாக ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39 ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள் அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும் எங்களோடு பேசுறதுக்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.
எங்களுடைய பேச்சை கேட்டார்கள். எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான, விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள். ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார். இந்த அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது காட்டுகிறது. நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. தமது பதவிகளை தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில் வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து வலிகளோடுதான் இருக்கிறோம். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர் படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி கூறினார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இன்று எங்கள் கோரிக்கைகளை, எங்கள் நியாயங்களை கேட்க கூட பிரதி அமைச்சர் தயாராகவில்லை.அநுர அரசாங்கத்தின் ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு நியாயம் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை.
இந்த அரசு வாய்மொழி மூலம் சொல்ற அனைத்தும் பொய்களாகவே இருக்கின்றது என்பது புலனாகிறது. எனவே, யாழ் ஊடக மையம் , யார் வந்தாலும் என்ன செய்தாலும் எமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும். ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி நாம் மாவட்ட செயலகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது, மாவட்ட செயலகம் உள்ளே சில ஊடகவியலாளர்களை அழைத்து செயலமர்வு நடக்கிறது, உண்மையிலேயே இந்த செயலமர்வு நடப்பதாக இருந்தால், அங்கே அந்த இடத்தில் முழு ஊடகவியலாளரும் பங்குபற்றி இருக்க வேண்டும். ஆனால் தாம் யாழ்ப்பாணத்தில் ஊடக செயலமர்வை நடாத்தி விட்டோம் என காட்ட , முனைந்துள்ளார்களே தவிர , ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் பிரச்சனைகளை கேட்க இந்த அரசாங்கம் தயாராகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

















