-பொது அமைப்புக்களுடன் இணைந்து அறிவித்தது தமிழரசு-
-பூர்வீக நிலங்களை காத்திட ஓரணியில் திரளவும் அழைப்பு-
-திட்டமிட்டபடி திங்கட்கிழமை எழுச்சிப் போராட்டம் உறுதி-
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கொண்டுவரப்படும் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் வவுனியா வடக்கினை சேர்ந்த பொது அமைப்புக்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நெடுங்கேணியில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக கலந்துகொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வவுனியா வடக்கின் பொது அமைப்புக்களின் வேண்டுகோள், ஆலோசனையின் பிரகாரம் முன்னதாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்வதாக இணக்கப்பாடு எட்டப்பட்டு தீர்மானம் இறுதி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் எதிர்வரும் 02 ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கூட்டத்தில் வவுனியா வடக்கை சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், து.ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


















