-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்-
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் இ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
கடந்தகாலத்தில் மகாவலி அதிகாரசபை ஊடாக சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றது உண்மைதான், ஆகவே புதிய திட்டங்கள் வரும்போது மக்களுக்கு அச்சம் வருவது நியாயமானது, அது கடந்தகால அனுபவத்தின் ஊடாக வருகிறது. கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அந்த பிரதேசத்திற்கு சொந்தமான தமிழ் மக்களையே அங்கு குடியேற்றப்போகிறோம்.
மாவட்டச் செயலர் ஊடாக குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளது. அதுதான் உண்மையாக நடக்கப்போவது, தமிழ் மக்களின் சந்தேகம் நியாயமானது. இனிமேல் அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உத்தரவாதமாக கொடுக்கிறோம். குடியேற்றப்படும் தமிழ் மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் நாம் செய்வோம்.
இப்போது இதனை பூதாகரமாக காட்டுகின்ற, தமிழ் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள், அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சராக அல்லது உறுப்பினராக வரமுடியுமா என யோசித்துக் கொண்டிருந்த நிலையில் கிவுல் ஓயா திட்டத்தை பிடித்து கொண்டார்கள்.
தமிழ் மக்களுக்கு தெரியும் இன்று கிவுல் ஓயா திட்டத்திற்காக பேசுகிறவர்கள், தங்கள் கட்சியை காப்பாற்ற முடியாதவர்கள், சக கட்சி உறுப்பினர்களுக்கு வேட்டுவைக்க நினைப்பவர்கள், குறிப்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் செய்கின்ற காவாலித்தனமான நடவடிக்கைக்கு யாழ்ப்பாண மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனை மறைக்க கிவுல் ஓயா திட்டத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள்.
அன்பான மக்களே கடந்தகால அரசாங்கம் வேறு, இப்போதுள்ள அரசாங்கம் வேறு.
வடக்கில் எமக்கு மக்கள் ஆணை உள்ளது. எங்கள் தலைவர், எங்கள் ஜனாதிபதி அடிக்கடி கூறும் வார்த்தை வடக்கு மக்களின் ஆணைக்கு கடுகளவும் துரோகம் செய்ய மாட்டோம்.
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதை இந்த நாடக நடிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

















