நாட்டில் தற்போது செயல்படாத நிலையில் உள்ள 33 அரச நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் இரண்டு கட்டங்களாக மூடப்படவுள்ளன.
பொதுச் சேவைகளை வழங்குதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டாலும் அவற்றில் பல நிறுவனங்கள் தற்போதுள்ள தேசிய தேவைகளுடனோ அல்லது சந்தை கோரிக்கைகளுடனோ ஒத்துப் போகவில்லை.
இந்த நிறுவனங்களை தொடர்ந்து பராமரிப்பது தேசிய பொருளாதாரத்திற்கோ அல்லது பொதுச் சேவை வழங்கலுக்கோ எந்த வகையிலும் பங்களிக்கவில்லை என்றும், அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே நிதி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனங்களை மூடும் பணி நிதி அமைச்சகத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஒரு ‘சிறப்பு மூடல் பிரிவு’ மேற்பார்வையில் நடைபெறும்.
வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிறுவனங்களை மூடுவதால் எந்தவொரு வேலை இழப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தினார்.
அதற்கமைய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் லிமிடெட், செலென்டிவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், லங்கா லொஜிஸ்டிக்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அம்பாந்தோட்டை 2018 லிமிடெட், மாகம்புர துறைமுக முகாமைத்துவ நிறுவனம் லிமிடெட், மிஹின் லங்கா லிமிடெட், டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பனி லிமிடெட், ஊடகப் பயிற்சி நிறுவனம் மற்றும் லங்கா சிமெண்ட் பி.எல்.சி உள்ளிட்டவையே இவ்வாறு மூடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

















