-கஜிந்தன்-
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதில் பல முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என தகவல்களூடாக உறுதிசெய்ய முடிகின்றது.
இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள் சட்டமுறையற்ற கட்டுமானங்கள் என்றே கருத்தில் கொள்ளப்படும்.
அத்துடன் அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் கட்டுமாணங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் நிலையும் உருவாகும்.
எனவே 1987 ஆம் ஆண்டு 15 இலக்க பிரதேச சபைகள் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரதேச சபையில் கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளல், அமைவுச் சான்றிதழ் அல்லது கால நீடிப்பு அனுமதியை பெறுதல், காணி உப பிரிவிடல் மற்றும் காணி ஒருங்கிணைத்தல் அனுமதியினை பெற்றுக்கொள்ளல், நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்குமான அனைத்து ஆவணங்களையும் சமைப்பித்தல் போன்ற நடைமுறையை பின்பற்றி கட்டடங்களுக்கான நிர்மாண அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


















