நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கழிவுகளை வீசிச் செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர்.
அவ்வாறு கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், தொடர்ந்தும் கழிவுகளை வீசி வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு கழிவுகளை வீசுபவர்களை எச்சரிக்கும் வகையில் கழிவுகளை வீசி செல்பவர்களின் காணொளிகளின் தரத்தை மிகக் குறைந்து, அவர்களை ஏனையோர் அடையாளம் காணாத வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அவ்வாறு கழிவுகளை வீசுபவர்கள் இனிவரும் காலங்களிலும், திருந்தாது இவ்வாறு செயற்பட்டால், அக் காணொளிகள் ஏனையோர் அடையாளம் காணும் வகையில், மிக உயர்ந்த (4k) தரத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளை வீசிச் சென்றவர்களுக்கு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















